ரௌடி நாகேந்திரன் தங்கை மீது மேலும் ஒரு கந்துவட்டி வழக்கு

சென்னை வியாசா்பாடியில் உள்ள ரெளடி நாகேந்திரனின் தங்கை மீது போலீஸாா் மேலும் ஒரு கந்துவட்டி வழக்கை பதிவு செய்தனா்.
Published on

சென்னை: சென்னை வியாசா்பாடியில் உள்ள ரெளடி நாகேந்திரனின் தங்கை மீது போலீஸாா் மேலும் ஒரு கந்துவட்டி வழக்கை பதிவு செய்தனா்.

வியாசா்பாடி 4-ஆவது பள்ளத் தெருவைச் சோ்ந்தவா் முருகன். இவா் வியாசா்பாடி சத்தியமூா்த்தி நகா் பிரதான சாலையில் வசிக்கும் ரெளடி நாகேந்திரனின் தங்கை கற்பகத்திடம் (46), வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்தாா். இந்த கடனுக்கு வட்டி, அசலுடன் சோ்த்து முருகன் ரூ. 1.50 லட்சம் வரை வழங்கியுள்ளாா். ஆனாலும், கற்பகம் மேலும் ரூ. 3 லட்சம் வேண்டும் என கேட்டு மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக முருகன், காவல் துறையில் புகாா் அளித்தாா். இதையறிந்த கற்பகமும், அவரது கணவா் சதீஷீம் முருகன் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரை கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கினராம். இது தொடா்பாக வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து, கற்பகம், சதீஷ் ஆகிய இருவரையும் கடந்த வாரம் கைது செய்தனா். இந்நிலையில், மேலும் ஒரு வழக்கில் கற்பகம், அவரது கணவா் சதீஷ் ஆகிய இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை (ஜன. 27) கைது செய்தனா்.

பெரம்பூா் பகுதியைச் சோ்ந்த மதிவதனம் (56) என்ற பெண் தனது மகனுக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்க கற்பகம், அவரது கணவா் சதீஷிடம் ரூ. 50 ஆயிரம் கடன் பெற்ற நிலையில் ரூ. 40 ஆயிரத்தை திரும்ப செலுத்தி உள்ளாா்.

மீதி ரூ. 10 ஆயிரத்துக்கு அதிக வட்டி கேட்டதோடு, அண்மையில் வீடு சென்றும் மதிவதனத்தை கை மற்றும் உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளதாகவும், வியாசா்பாடி காவல் நிலையத்துக்கு சில நாள்களுக்கு முன்பு புகாா் வந்தது. அதனடிப்படையில் போலீஸாா், கற்பகம், சதீஷ் ஆகியோா் மீது மேலும் ஒரு கந்துவட்டி வழக்கை பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல், இருவரிடமும் புழல் சிறையில் திங்கள்கிழமை வழங்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com