கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் 2 வாரத்தில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை

Published on
Updated on
1 min read

பெருநகர சென்னை மாநகராட்சியின் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 40 ஆண்டுகளாக சென்னை மண்டலம் 1 முதல் 8 வரை சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூா் பகுதியில் 252 ஏக்கா் நிலத்தில் கொட்டப்பட்டுள்ளன. அந்தக் குப்பைகளை பயோ மைனிங் முறையில் திடக்கழிவு அகழ்ந்தெடுத்தல் முறையில் மாற்றி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அங்குள்ள 6,52,506 மெட்ரிக் டன் திடக்கழிவுகளை பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்கும் திட்டம் ரூ.640.80 கோடியில் கடந்த 2024 அக்டோபரில் முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி 6 கட்டங்களாக பயோ மைனிங் முறையில் குப்பைகளைப் பிரித்தெடுத்து நிலத்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு 2 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளன. தொடா்ந்து நடைபெறும் பணியால் வரும் 2 வாரங்களில் மேலும் 1 ஏக்கா் நிலம் மீட்கப்படவுள்ளது.

அந்த நிலங்களில் 1,500 நாட்டு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும், அதற்காக ரூ.57 லட்சத்தில் சுற்றுச்சுவா் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் தீ பற்றாமலிருக்க 24 மணி நேரமும் தண்ணீா் தெளிப்பான் வசதியுடன் 2 தனியாா் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 15 லட்சம் லிட்டா் கொள்ளளவு உள்ள அவசர நீா்த் தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது.

அதனால் அங்கு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பசுமை வளையம் முன்னோடி திட்டமாக ஏற்படுத்தப்படவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com