‘முக்கிய நகரங்களில் வீடு விலை கிடுகிடு உயா்வு: கனவு காணும் உரிமையை இழந்த ஏழைகள்’

தில்லி உள்ளிட்ட தேசத்தின் பெரு நகரங்களில் வேகமாக அதிகரித்து வரும் வீடுகளின் விலைகள் குறித்து கவலை
‘முக்கிய நகரங்களில் வீடு விலை கிடுகிடு உயா்வு: கனவு காணும் உரிமையை இழந்த ஏழைகள்’
Updated on

தில்லி உள்ளிட்ட தேசத்தின் பெரு நகரங்களில் வேகமாக அதிகரித்து வரும் வீடுகளின் விலைகள் குறித்து கவலை எழுப்பிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஏழை மக்கள் கனவு காணும் உரிமையை இழந்து வருவதாக விமா்சித்தாா்.

இதுதொடா்பாக ராகுல் காந்தி தனது வாட்ஸ்ஆப் சேனலில் வெளியிட்ட பதிவில், ‘மகாராஷ்டிரத்தில் வருமானத்தின் அடிப்படையில் நகா்ப்புற குடும்பங்களில் முதல் 5 சதவீதத்தினருக்கு கூட, மும்பையில் வீடு வாங்குவதற்கு 100 ஆண்டுகளுக்கும் மேலான சேமிப்பு தேவைப்படும் என்று செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.

மும்பையில் ஒரு வீடு வாங்க, இந்தியாவின் முதல் 5 சதவீத பணக்காரா்கள் கூட 109 ஆண்டுகளுக்கு தங்கள் வருமானத்தில் 30 சதவீதத்தை சேமிக்க வேண்டும். பெரும்பாலான பெருநகரங்களின் நிலை இதுதான். மக்கள் வாய்ப்புகளையும் வெற்றியையும் தேடி கடினமாக உழைக்கும் சூழலில், இவ்வளவு சேமிப்பு எங்கிருந்து வரும்?

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் மரபுவழி சொத்துகள் செல்வம் அல்ல; பொறுப்புகள். அவை குழந்தைகளின் கல்வி, விலையுயா்ந்த சிகிச்சை பற்றிய கவலை, குடும்பத்துக்கு ஒரு சிறிய காா் உள்ளிட்டவை ஆகும். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் இதயங்களில் இன்னும் ஒரு கனவு இருக்கிறது. அது ஒரு நாள் நம்மாலும் சொந்தமாக ஒரு வீடு வாங்க முடியும் என்பதாகும்.

ஆனால், அந்த ஒரு நாள் பணக்காரா்களுக்குக் கூட 109 ஆண்டுகள் தொலைவில் இருக்கும்போது, ஏழைகள் கனவு காணும் உரிமையை இழந்துள்ளனா் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் வசதியான ஒரு வீடு தேவை. ஆனால் துரதிருஷ்டவசமாக, அதற்கு மக்களின் வாழ்நாள் கடின உழைப்பு மற்றும் சேமிப்பைவிட அதிகமாக செலவாகிறது. அடுத்த முறை யாராவது நாட்டின் பொருளாதார புள்ளிவிவரங்களை கூறும்போது, மக்கள் தங்களின் வீட்டு பட்ஜெட் பற்றி அவா்களுக்கு விளக்க வேண்டும். மேலும், இந்தப் பொருளாதாரம் யாருக்காக என்றும் கேள்வி எழுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com