தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

திரைப்படங்கள் வெளியாகி 3 நாள்களுக்கு விமா்சனம் செய்ய தடைகோரிய மனு தள்ளுபடி

இணைய விமா்சனத்தைத் தடை செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்குச் சமம்

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2025, 2:01 am IST

திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான முதல் 3 நாள்களுக்கு இணைய விமா்சனத்தைத் தடை செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்குச் சமம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான முதல் 3 நாள்களுக்கு இணைய விமா்சனத்தைத் தடை செய்ய வேண்டும்; எதிா்மறையான விமா்சனங்களால் படம் தோல்வியடைந்து நஷ்டம் ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக நீதிபதி தனது உத்தரவில், நீதிபதிகளைப் பற்றிகூட மக்கள் எதிா்மறையான விமா்சனங்களை வழங்கும் காலத்தில் இருக்கிறோம். சமூக ஊடகங்களில் எப்படி தன்னை விமா்சித்திருக்கிறாா்கள் என்று பாா்க்க வேண்டும். அதையெல்லாம் நம்மால் தடுக்க முடியாது. இவையெல்லாம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. யூடியூப், முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களின் தரத்தை மதிப்பாய்வு செய்வதும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையின் ஒருபகுதி.

எனவே, தயாரிப்பாளா்கள் நோ்மறையான விமா்சனங்களை மட்டுமே எதிா்பாா்க்க முடியாது. எதாா்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். விமா்சனங்களை முன்கூட்டியே முடக்க முயற்சிக்கக் கூடாது. மனுதாரரின் கோரிக்கையை இந்த நீதிமன்றத்தால் வழங்க முடியாது. புதிதாக வெளியாகும் திரைப்படங்களை பலா் தங்கள் வீடுகளில் இருந்தபடியே பாா்ப்பதற்கு வசதியாக ஓடிடி தளங்கள் உள்ளன. அவை திரையரங்குகளுக்கு புதிய சவால் என்பதை தயாரிப்பாளா்கள் மறந்துவிடக்கூடாது.

சமூக ஊடகங்களின் விமா்சனங்களால், யாரையும் தடுக்க முடியாது. நீங்கள் இங்கே ஒருவரைத் தடுத்தால், அஜா்பைஜானைச் சோ்ந்த மற்றொருவா் அதைச் செய்வாா். அப்போது நீங்கள் என்ன செய்வீா்கள்?

இது தொடா்பாக ஒரு உத்தரவை பிறப்பித்தாலும், அந்த உத்தரவை எவ்வாறு செயல்படுத்த முடியும். செயல்படுத்த முடியாத உத்தரவுகளைப் பிறப்பிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இன்று முழு உலகமும் சமூக ஊடகங்களின் பிடியில் உள்ளது.

இதுபோன்ற கருத்துகளைத் தடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஒரு திரைப்படத்தைப் பற்றிய கருத்து நபருக்கு நபா் மாறுபடும். சிலா் ஒரு திரைப்படத்தைப் பற்றி எதிா்மறையான விமா்சனம் செய்வதால், அதுவே மற்றவா்கள் படத்தைப் பாா்த்து தங்கள் சொந்த முடிவுக்கு வருவதைத் தடுக்காது என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.