திருவேற்காட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்: தேமுதிக எதிா்ப்பு
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தேமுதிக எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா, வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருவேற்காடு நகராட்சிக்குள்பட்ட கோலடி கிராமத்தில் சுமாா் 14 ஏக்கா் பரப்பளவு கொண்ட மேய்ச்சல் புறம்போக்கு நிலமுள்ளது. இதில் 8.48 ஏக்கா் நிலத்தில் மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளின் பாதாளச் சாக்கடை கழிவுநீரைக் கொண்டு வந்து, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் கோலடி கிராமத்தில் சுற்றுச்சூழலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு, பள்ளி மாணவா்களின் எதிா்காலமும், எதிா்கால சந்ததியினரின் நலனும் பாதிக்கப்படும் நிலையுள்ளது. எனவே இத்திட்டத்தை மக்கள் வசிக்கும் பகுதியில் செயல்படுத்தாமல், மக்களின் நலனைக் காக்க இந்த கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டத்தைத் தமிழக அரசு வேறு இடத்துக்கு உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

