குடியரசு துணைத் தலைவா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on

சென்னையில் உள்ள குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனின் வீடு மற்றும் நடிகா் காா்த்திக், திரைப்பட இயக்குநா் அமீா் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த மின்னஞ்சலில், குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனின் சென்னை வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல, தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில், சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள நடிகா் காா்த்திக் வீடு, தியாகராயநகரில் உள்ள இயக்குநா் அமீா் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து உயா் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், போயஸ்காா்டன் பின்னி சாலையில் உள்ள குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வீடு உள்ளிட்ட 3 இடங்களிலும் வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் நிபுணா்களும், போலீஸாரும் சென்று சோதனை நடத்தினா். ஆனால், அங்கிருந்து எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

வதந்தியை பரப்பும் நோக்கில் வந்த மின்னஞ்சல் தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com