செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல் மூன்று மாதத்திற்கு பிறகு செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு வயது (40). இவருக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து கடந்த 19-05-2021 அன்று செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் .
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் மூன்று நாட்களில் மே 22ஆம் தேதி (22-05-21) பரிதாமாக உயிரிழந்தார். இதன் தொடர்ச்சியாக கரோனாவால் உயிரிழந்த அலமேலு உடல் உறவினர்களிடம் கொடுக்க முடியாது எனவும் தாங்களே எரித்துவிடுவோம் எனவும் கூறி அவர்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிக்க | அருப்புக்கோட்டை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்
மறுநாள் 23-05-2021 அன்று அலமேலு உறவினர்களுக்கு தொடர்பு கொண்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் அலமேலுவை எரித்துவிட்டதாக தகவல் தெரிவித்ததாக அலமேலுவின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
இந்த நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து அலமேலு உறவினருக்கு தொடர்பு கொண்டவர்கள் அலமேலு உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் இருப்பதாகவும் நாளை மருத்துவமனைக்கு நேரில் வந்து உடலை பெற்று கொள்ளும்படி கூறியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்த அலமேலு உறுவினர்கள் மருத்துவமனையில் உள்ள நிலைய மருத்துவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் வினாயகம் மற்றும் காவல்துறையினர் அலமேலுவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தவறு செய்த மருத்துமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து உடலை பெற்றுகொள்வதாக கூறி அலமேலு உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் உயிரிழந்த அலமேலுவின் உடலை அடக்கம் செய்ய ரூ. 2500 மற்றும் அலமேலு முகத்தை பார்க்க அவரது உறவினர்களிடம் ரூ.500 மருத்துவமனையில் லஞ்சம் வாங்கியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுப்தாக மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதியளித்தனர்.
கரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை மூன்று மாதங்களுக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.