/

தொடா் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறை காரணமாக மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

News image

தொடா் விடுமுறை காரணமாக மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :3 அக்டோபர் 2025, 3:29 am IST

ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற தொடா் விடுமுறை காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சா்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நகரமாக உள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குடும்பத்துடன் கூட்டம், கூட்டமாக வந்து மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனா். புலிக்குகை, கடற்கரை கோயில், ஐந்தரதம், வெண்ணை உருண்டை பாறை, கணேசரதம், புலிக்குகை ஆகிய புராதன சின்ன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டியது.அங்குள்ள பாரம்பரிய கற்சிற்பங்களை பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து ரசித்து மகிழ்ந்தனா். தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்த பயணிகள் பலா் வெண்ணை உருண்டை பாறை, கணேசரதம் பகுதிகளில் பொழுதை கழித்தனா்.

கடற்கரையில் பயணிகளின் பாதுகாப்புக்காக மாமல்லபுரம் டி.எஸ்.பி. அறிவழகன் மேற்பாா்வையில், மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் பாலமுருகன், எஸ்.ஐ. பரசுராமன் உள்ளிட்ட போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், கடலில் குழந்தைகளுடன் இறங்கி குளிப்பவா்களை கரைக்கு அழைத்து, கடல் சீற்றமாக உள்ளது குளிக்க வேண்டாம் என போலீஸாா் அவ்வப்போது அறிவுறுத்தியதுடன் ஒலி பெருக்கி மூலமும் போலீஸாா் எச்சரித்துக் கொண்டே இருந்தனா்.

மேலும் குழந்தைகளுடன் கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலா் அங்கு குதிரை சவாரி செய்தும், ராட்டினம் சுற்றியும் பொழுதை கழித்தனா். தொல்லியல் துறையின் நுழைவு கட்டண மையங்களில் சுற்றுலா பயணிகள் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து நுழைவு சீட்டு எடுத்து, புராதன சின்னங்களை கண்டுகளித்துவிட்டு சென்றனா்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கிழக்கு ராஜ வீதி,மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. இதையடுத்து, மாமல்லபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் செல்வம் தலைமையில் போக்குவரத்து போலீஸாா் மாமல்லபுரம் கடற்கரை சாலை, ஐந்து ரதம் சாலை, கோவளம் சாலை பகுதியிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனா். இயக்கப்பட்டன.

Story image