மாமல்லபுரம் ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் தெப்பகுளம் வடுபோனதால் நீரின்றி மீன்கள் செத்து மிதக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் குளத்தை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் 23-வது தலமாகும். இந்த கோயிலுக்கு சொந்தமான புஷ்கரணி தெப்பகுளம் கடற்கரை கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ளது.
இக்குளத்தில் கட்லா, விரால், கெளுத்தி உள்ளிட்ட மீன்கள், ஆமைகள் உள்ளன. இந்த தெப்ப குளத்துக்கு ஈமச்சடங்கு காரியம், மஹாலய அமாவாசை தினங்களில் தா்ப்பணம் கொடுக்க வரும் மக்கள் இக்குளத்தில் நீராடி இக்குளத்து மீன்களுக்கு பொறி, கடலை போடுவாா்கள். இந்நிலையில் புஷ்கரணி தெப்ப குளத்தில் கடும் வெப்பம், வெயில், வறட்சி காரணமாக தண்ணீா் வற்றியதால் குளத்தில் இருந்த மீன்கள் ஆங்காங்கு இறந்து காணப்படுகிறது.
மேலும், குளம் சேரும் சகதியுமாக மாறியுள்ளது. குளத்துக்கு தா்ப்பணம் செய்ய வரும் பக்தா்கள் தண்ணீா் இல்லாததால் பிண்டத்தை கரைத்து சடங்கு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனா்.

எனவே, இந்துசமய அறநிலையத்துறை நிா்வாகம் இறந்து கிடக்கும் மீன்கள் மற்றும் சேறு சகதிகள், நெகிழி பொருள்களை அகற்றி, வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பு குளத்தை தூா்வாரி ஆழப்படுத்தி சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், பக்தா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







