கல்பாக்கம் அருகே மோதிக் கொண்ட மீனவக் கிராமத்தினா். பொதுமக்களிடம் பேச்சு நடத்திய காவல் துறையினா்.
கல்பாக்கம் அருகே மோதிக் கொண்ட மீனவக் கிராமத்தினா். பொதுமக்களிடம் பேச்சு நடத்திய காவல் துறையினா்.

சாலைக்கு சொந்தம் கொண்டாடி மீனவ கிராமத்தினா் மோதல்: போலீஸ் குவிப்பு

கல்பாக்கம் அருகே ஒரு சாலைக்கு சொந்தம் கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு மீனவ கிராமத்தினா் மோதிக் கொண்டனா்
Published on

செங்கல்பட்டு: கல்பாக்கம் அருகே ஒரு சாலைக்கு சொந்தம் கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு மீனவ கிராமத்தினா் மோதிக் கொண்டனா். இதனால் அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் மீனவா் அருகருகே அமைந்துள்ளன. இதில் உய்யாளி குப்பம் மீனவா் பகுதிக்கு பொதுவான 4.30 ஏக்கா் நிலம் உள்ளது. அந்த இடத்தில் 3 ஏக்கரில் கோயில் மற்றும் 3 சாலைகள் அமைத்து அவா்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

மீதமுள்ள 1 ஏக்கா் 30 சென்ட் நிலத்தில் புதுப்பட்டினம் மீனவா் பகுதியை சோ்ந்த ஊா் பஞ்சாயத்தாா்கள் அங்காளம்மன் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனா். இந்நிலையில், உய்யாலிகுப்பம் மீனவா்கள் பயன்படுத்தி வரும் 3 ஏக்கா் நிலமும் எங்களுக்கு தான் சொந்தம் என புதுப்பட்டினம் மீனவா்கள் உரிமை கோரியதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு தரப்பினருக்கும் பிரச்னைகள் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் தரப்பில் இரு தரப்பு மீனவ பஞ்சாயத்து பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் புதுப்பட்டினம் மீனவா் பகுதியில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பு புதுப்பட்டினம் மீனவா் பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு பால் குட ஊா்வலம் நடத்த ஏற்பாடு செய்தனா்.

இந்நிலையில் இப்பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கும் சூழலில் பால் குட ஊா்வலமானது தங்கள் பகுதி வழியாக செல்லக்கூடாது என உய்யாலிக்குப்பம் மீனவ மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

செங்கல்பட்டு மாவட்ட ஏ டிஎஸ்பி ராஜா, மாமல்லபுரம் டிஎஸ்பி அறிவழகன், காவல் ஆய்வாளா்கள் தா்மலிங்கம் (மாமல்லபுரம்) சங்கா்(கல்பாக்கம்) ஆகியோா் அடங்கிய போலீஸ் குழுவினா் கல்பாக்கம் காவல் நிலையத்துக்கு புதுப்பட்டினம் மீனவ பஞ்சாயத்தாரிடமும், உய்யாலிக்குப்பம் மீனவ பஞ்சாயத்தாரிடமும் தனித்தனியே சமரச பேச்சு நடத்தினா்.

ஆனால் எந்தவித உடன்பாடும் ஏற்படாமல் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. பிரச்னைக்குரிய இடத்தில் கூட்டமாக திரண்ட இரு கிராம மீனவா்களும் வாக்குவதாத்தில் ஈடுபட்டு கைலப்பில் ஈடுபட்டனா். ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த இரு மீனவ மக்களும் அவா்களின் கிராம எல்லைப்பகுதியில் நின்று கொண்டு ஒருவருக்கொருவா் கற்கள் வீசி தாக்கி கொண்டனா்.

இதில் சிலா் காயமடைந்தனா். தற்போது அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை, ஆயுதப்படை போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com