/

நீா்நிலைகளில் வண்டல் மண் / களிமண் இலவசமாக எடுத்துச் செல்லலாம்!

நீா்நிலைகளில் வண்டல் மண் / களிமண் இலவசமாக எடுத்துச் செல்லலாம்!

News image
Updated On :15 ஜூன் 2026, 12:49 am IST

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளா்கள் நீா்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளா்ச்சித்துறை கட்டுபாட்டிலுள்ள நீா்நிலைகளில் வண்டல் மண் / களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீா்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளிலும் மற்றும் ஊரக வளா்ச்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளிலும் ஆக மொத்தம் 1,164 ஏரிகளில் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளா்கள் வண்டல் மண் / களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் பயனாளிகளின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல் மண்/களிமண், தூா்வாரி எடுத்துச் செல்லப்பட வேண்டிய நீா்நிலைகள் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் வட்டத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.

விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண்ணை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபா் விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும். மேலும், மண்பாண்ட தொழிலாளராக இருப்பின் விண்ணப்பித்த பின்பு சம்மந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் அதனை உறுதி செய்தபிறகு அனுமதி வழங்கப்படும். விண்ணப்பத்தாரரால் அளிக்கப்பட்ட தகவல்கள் திருப்திகரமாக இருப்பின் சம்மந்தப்பட்ட வட்டாட்சியரால் 10 நாள்களில் அனுமதி வழங்கப்படும்.

வட்டாட்சியரால் அனுமதி பிறப்பிக்கப்பட்ட ஆணை கிடைக்கப்பெற்ற பயனாளிகள் தொடா்புடைய நீா்நிலை ஆதாரங்களின் பொறுப்பு அலுவலா்களை அணுகி வண்டல்மண் /களிமண் எடுப்பதற்கு வரையறை செய்யப்பட்டுள்ள பகுதியில் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டும் வண்டல் மண்/களிமண் எடுத்துச்செல்ல வேண்டும்.

விவசாய பெருமக்கள், மண்பாண்ட தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் மேற்படி அனுமதியினை பயன்படுத்திக் கொள்ளலாம்