வறட்சியால் குறைந்த மாம்பழ உற்பத்தி
சென்னை, ஏப்.18: பருவமழை பொய்த்ததன் காரணமாக இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் சந்தையில் மாம்பழ விலை அதிகரித்துள்ளது. ÷தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி,


சென்னை, ஏப்.18: பருவமழை பொய்த்ததன் காரணமாக இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் சந்தையில் மாம்பழ விலை அதிகரித்துள்ளது.
÷தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழம் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டு மிகக் குறைவான அளவே பருவமழை பெய்தது.
÷மேலும் தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியின் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள மாமரங்களில் வழக்கத்தைவிட மிகக் குறைவாகவே பூக்கள் பூத்தன. அவ்வாறு பூத்த பூக்களிலும் பெரும்பகுதி உதிர்ந்துவிட்டன.
÷மீதமுள்ள பூக்கள் பிஞ்சாக மாறினாலும், வெப்பத்தின் கடுமை தாங்காமல் பெருமளவு பிஞ்சுகள் வெம்பி, உதிர்ந்து விட்டதாக அம்மாவட்ட மாம்பழ விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
÷இதன் காரணமாக இந்த ஆண்டு சந்தைகளில் மாம்பழ வரத்து வழக்கத்தைவிட மிகவும் குறைவாக உள்ளது.
÷இது குறித்து சேலம் மாவட்ட மாம்பழ வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ. ஜெயபால் கூறியதாவது:
÷தமிழகத்தில் மாம்பழ சீசன் வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரலில்தான் தொடங்கியுள்ளது. சீசன் தாமதமாகத் தொடங்கியது மட்டுமின்றி, வரத்தும் மிகக் குறைவாகவே உள்ளது.
÷ஒவ்வொரு ஆண்டும் இந்த காலகட்டத்தில் சேலம் சந்தைக்கு தினமும் 100 டன் மாம்பழம் வரும். ஆனால், இந்த ஆண்டு 10 டன் மட்டுமே வருகிறது. இதனால் மாம்பழ விலை அதிகரித்துள்ளது என்றார் ஜெயபால்.
÷சென்னையைப் பொருத்தவரை தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களைத் தவிர, ஆந்திரத்தில் இருந்துதான் பெருமளவு மாம்பழம் வருகிறது. ஆனால், வறட்சியின் பாதிப்பு ஆந்திரத்திலும் மாம்பழ உற்பத்தியில் சரிவை ஏற்படுத்தியுள்ளது.
÷இதனால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு மிகக் குறைந்த அளவிலேயே மாம்பழம் வருகிறது.
÷இது குறித்து சென்னை பழக் கமிஷன் ஏஜெண்டுகள் சங்கத் தலைவர் எஸ். சீனிவாசன் கூறியதாவது:
÷சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருத்தணி, பாலக்காடு, விஜயவாடா, நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்கு மாம்பழங்கள் வருகின்றன. கடந்த ஆண்டு இதே நேரத்தில் தினமும் 200 டன் மாம்பழம் வந்தது. ஆனால் இப்போது 50 முதல் 60 டன் வரை மட்டுமே வருகிறது. இன்னும் 15 நாட்களில் வரத்து அதிகமாகலாம். எனினும், வழக்கமான மாம்பழ வரத்து இந்த ஆண்டு இருக்காது. இதனால் மொத்த சந்தையிலும், சில்லரை விற்பனையிலும் மாம்பழ விலை அதிகரித்துள்ளது என்றார் சீனிவாசன்.
÷சென்னை, அண்ணா கனி அங்காடி வியாபாரிகள் பொதுநல சங்க செயலாளர் என்.பி. முருகன் கூறும்போது, "இப்போது பங்கனப்பள்ளி கிலோ ரூ.40, அல்போன்சா ரூ.90, இமாம்பசந்த் ரூ.100, செந்தூரா ரூ.40 என விற்பனை ஆகிறது. இது கடந்த ஆண்டு விலையைவிட 50 சதவீதம் அதிகம். வரத்து அதிகமானால் விலை குறையும். எனினும் எந்த அளவுக்கு வரத்து அதிகரிக்கும் என்பதை இப்போது கூற முடியாது" என்றார்.
÷வறட்சியால் மாம்பழ உற்பத்தியில் ஏற்பட்ட இந்த சரிவு, மாம்பழ பிரியர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...