/

மாநகராட்சிப் பள்ளிகளில் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை எப்போது மாறும்?

சென்னை, பிப். 11: சென்னையில் உள்ள பெரும்பாலான மாநகராட்சிப் பள்ளிகளில் 10}ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து பயிலும் நிலையே இன்றும் தொடர்கிறது. இதனால் மாணவர்களுக்கு படிப்பில் கவனக்

Updated On :20 செப்டம்பர் 2012, 10:15 am

சென்னை, பிப். 11: சென்னையில் உள்ள பெரும்பாலான மாநகராட்சிப் பள்ளிகளில் 10}ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து பயிலும் நிலையே இன்றும் தொடர்கிறது.

இதனால் மாணவர்களுக்கு படிப்பில் கவனக் குறைவும், உடல் பாதிப்புகளும் ஏற்படுகிறது என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக பெரும்பாலான அரசு பள்ளிகளிலும் 6}ம் வகுப்பு முதல் 12}ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு மேசை, நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும் சில ஆண்டுகளுக்கு முன் இந்த நிலைதான் இருந்தது.

ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிலை மாறிவிட்டது. பெரும்பாலான மாநகராட்சிப் பள்ளிகளில் 10}ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, வடசென்னை பகுதி பள்ளிகளிலேயே இந்த நிலை தொடர்கிறது.

சென்னை கொருக்குப்பேட்டை, மணிகண்ட முதலி தெரு, அரிநாராயணபுரம், தண்டையார்பேட்டை டி.எச்.சாலை, ஆஞ்சநேயர் நகர், அப்பாசாமி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மாநகராட்சி உயர் நிலைப் பள்ளிகளில் 10}ம் வகுப்பு வரை பயிலும் பெரும்பாலான மாணவர்கள் தரையில் அமர்ந்தே பயிலும் நிலை உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியது:

சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் மாநில அளவில் ரேங்க்குகளை பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளன. ஆனால், ஆசிரியர் பற்றாக்குறை, பள்ளிக்குத் தேவையான பொருள்களை வாங்கப் போதிய நிதியின்மை, மாணவர்கள் அமருவதற்கான மேசை, நாற்காலிகள் இல்லாதது போன்ற காரணங்களால் கல்வித் தரம் இப்போது கேள்விக் குறியாகியுள்ளது.

தரையில் அமர்வதால் மாணவர்கள் எழுதுவதற்கு சிரமப்படுவதோடு, ஆசிரியர் நடத்தும் பாடத்தை 5 மணி நேரத்துக்கு மேல் கழுத்தை உயர்த்தி கவனிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் சிறு வயதிலேயே கழுத்து வலியும், முதுகு வலியும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு கவனக்குறைவு ஏற்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால், மாநில அளவில் ரேங்க் பெற்றுவரும் மாநகராட்சிப் பள்ளிகளில் கூட, தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் யோசிக்கின்றனர்.

பல முறை கோரிக்கை விடுத்தும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாணவர்களின் மேசை, நாற்காலிகள் ஆய்வு செய்யப்பட்டு மாற்றப்பட வேண்டும்.

மாணவ, மாணவிகளின் உடல் நலம், கல்வி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பள்ளி தேவைகளை உடனடியாக அதிகாரிகள் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.