டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருவொற்றியூர் அரசு மருத்துவமனை முழுவீச்சில் செயல்படுவது எப்போது?

திருவொற்றியூரில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.5 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு பொது மருத்துவமனை திறப்பு விழா கண்டு இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் முழு வீச்சில் செயல்படவில்லை.

News image
Updated On :8 அக்டோபர் 2013, 10:00 pm

முகவை க.சிவக்குமார்

திருவொற்றியூரில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.5 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு பொது மருத்துவமனை திறப்பு விழா கண்டு இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் முழு வீச்சில் செயல்படவில்லை.

இதற்கு டாக்டர்கள், பணியாளர்கள் போதிய அளவில் நியமிக்கப்படாததே காரணம் என்பதால் இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டைம்ஸ் பவுண்டேசன் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சுனாமி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி செலவில் நவீன மருத்துவமனை ஒன்றை கட்டி அரசிடம் ஒப்படைத்தது. பின்னர் அது அரசு பொது மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது. இம்மருத்துவமனை கடந்த பிப். 2011-ல் திறக்கப்பட்டது. அப்போது மருத்துவமனைக்கு தேவையான 10 டாக்டர் பணியிடங்களில் 3 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. அதிலும் தற்போது 2 மருத்துவர்கள், பணியாளர்கள் என 11 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

பயன்படாத நவீன வசதிகள்: துருப்பிடித்துப் போன கருவிகள் இம்மருத்துவமனையில் 50 உள்நோயாளி படுக்கைகள், பிரசவ அறை, அறுவைச் சிகிச்சைக் கூடம், ரூ.4 லட்சம் செலவில் எக்ஸ் ரே, சுமார் ரூ.15 லட்சம் செலவில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், பரிசோதனைக் கூடம், மருந்தகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்ட நாளில் இருந்தே சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. ஆனால் சிகிச்சையளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் இல்லாததால் இவ்வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. சுமார் 3 லட்சம் பேர் பயன் பெற வசதியாகக் கட்டப்பட்ட இம்மருத்துவமனை அதிகாரிகளின் கவனமின்மையால் முக்கியத்துவம் இழந்து வருகிறது. 50 படுக்கைகளில் ஒருவர் கூட உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை. மருத்துவமனை முழுவதும் தூசி அடைந்து, நாற்காலிகள், கட்டில்கள் எல்லாம் துருப்பிடித்துப் போய் உள்ளன.

பிரசவ அறை உண்டு. ஆனால் பெண் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களே அரிதாக பிரசவம் பார்க்கின்றனர்.

மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தொடங்கப்பட்ட இம்மருத்துவமனை இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும் முழுமையாக செயல்படாததற்கு அதிகாரிகளின் கவனமின்மை காரணம் என வடசென்னை நல உரிமைக் கூட்டமைப்பின் மூத்த தலைவரான ஜி.வரதராஜன் தெரிவித்தார்.

இணை இயக்குநர் ஆய்வு: இந்நிலையில் இம்மருத்துவமனையை திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குனர் (சுகாதாரம்) டாக்டர் எஸ்.இளங்கோ, சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கே.குப்பன் எம்.எல்.ஏ. கூறியது,

மருத்துவமனையை இணை இயக்குநர் ஆய்வு நடத்தி அறிக்கை தயாரித்துள்ளார். இம்மருத்துவமனை முழு வீச்சில், பல்துறை மருத்துவமனையாக இயக்கப்பட வேண்டும். இதற்கு பத்துக்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் தேவை. இது குறித்த அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்றார் குப்பன்.

திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனையின் வெளித்தோற்றம், துருப்பிடித்துப் போன நோயாளிகள் காத்திருக்கும் இருக்கைகள் (நடுவில்),

மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படாததால் காலியாக உள்நோயாளி படுக்கைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.