சென்னை: சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் காணும் பொங்கலை முன்னிட்டு செவ்வாயன்று மெரினா உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகளுக்கும் சென்றிருப்போம். ஆனால், புதன்கிழமை ஏதேனும் ஒரு கடற்கரையைச் சென்று பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் அதன் துயரக் காட்சி.
சென்னையில் உள்ள கடற்கரைகளிலிருந்து புதன்கிழமை திரட்டப்பட்ட குப்பைக் கழிவுகளின் எடை 235 டன்கள் என்கிறது சென்னை மாநகராட்சி.
நூற்றுக்கணக்கான மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் பகல், இரவு பாராமல், மெரினா கடற்கரையை சுத்தம் செய்ததன் பலனாக, இந்த அளவுக்கு குப்பைகள் சேகரிப்பட்டு, கடற்கரைகள் தூய்மையாக்கப்பட்டுள்ளன.
இந்த குப்பைகளை தரம்பிரித்தால், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், வாழைஇலைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் என பட்டியல் நீளும். சென்னை மாநகராட்சி மணல்பகுதியை சுத்தம் செய்யும் இயந்திரங்களை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளில் பயன்படுத்தி வருகிறது.
சென்னை கடற்கரைகளில் தூய்மைப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, 15 பேர் கொண்ட குழுக்கள் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை துப்புரவுப் பணிகளை கண்காணித்தனர். கடலில் எறியப்படும் குப்பைகள், கடைகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு குப்பைகள் சேகரிப்பை உறுதி செய்தல், அவ்வாறு செய்யாதவர்களுக்கு அபராதம் விதிப்பது என பல வழிகளில் கடற்கரையின் சுத்தத்தை உறுதி செய்திருந்தததாகவும் கூறப்படுகிறது.
துப்புரவுப் பணியாளர்களிடம், கடற்கரை மணலில் உடைந்திருக்கும் பாட்டில்களையும் தனியாக சேகரிக்கும்படி ஆணையர் அறிவுறுத்தியிருந்தார்.
தூய்மைப் பணியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் வகையில், நள்ளிரவில், எந்த கடற்கரைப் பகுதி மிகவும் தூய்மையாக இருந்ததோ அது தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு, போகிப் பண்டிகையன்று, பொதுமக்களிடமிருந்து நேரடியாக 202 டன்கள் குப்பைக் கழிவுகள் சேகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.