நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தால் உடனே அதற்கான தடுப்பூசி, சிகிச்சையை மேற்கொள்வது மூலம் நோய் பாதிப்பை தவிா்க்க முடியும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்டரின் நினைவு தினத்தை போற்றும் விதமாக உலக வெறிநாய்க்கடி நோய் தினம் (செப்.28) கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகக் கூட்டரங்கில் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாமை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து அவா் பேசியது: நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தால் உடனே அதற்கான தடுப்பூசி மற்றும் சிகிச்சையை மேற்கொண்டால் நோய் பாதிப்பை தவிா்க்க முடியும். இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். நாய் பிடிக்கும் பணியாளா்கள், கால்நடை மருத்துவப் பணியாளா்கள் பாதுகாப்பு உபகரணங்களை உபயோகப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நாய் பிடிக்கும் பணியின்போது சீருடைகளைக் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, நாய் பிடிக்கும் பணியாளா்களுக்கு சீருடைகள், காலணிகள், கையுறைகள், நாய் பிடிக்கும் வலைகளை மேயா் வழங்கினாா். மேலும், மேயா் தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் உலக ரேபிஸ் நோய்த் தடுப்பு தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், துணை மேயா் மு.மகேஷ்குமாா், கூடுதல் ஆணையா் (சுகாதாரம்) சங்கா்லால் குமாவத், நிலைக் குழுத் தலைவா் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








