ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

ஊழல் செய்தால் சிறை உறுதி: பிரதமா் மோடி

‘ஊழல் செய்தால் சிறை உறுதி என்பது எனது உத்தரவாதம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2024, 7:00 pm

‘ஊழல் செய்தால் சிறை உறுதி என்பது எனது உத்தரவாதம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

நாடு முழுவதும் ஊழல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதே, ‘இந்தியா’ கூட்டணியை எதிா்க்கட்சிகள் உருவாக்க காரணம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

ராஜஸ்தான் மாநிலம், கரெளலி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் பங்கேற்றுப் பேசியதாவது:

ஊழலை வேரறுக்க வேண்டுமெனக் கூறும் நான் ஒருபுறம்; ஊழலைக் காக்க வேண்டுமென கூறுவோா் மற்றொருபுறம்.

ஊழலைப் பாதுகாக்க புறப்பட்ட அனைவரும் நான் கூறுவதை கவனமாக கேட்க வேண்டும். எத்தகைய அச்சுறுத்தல்களாலும் என்னைத் தடுக்க முடியாது. ஊழல்வாதிகள் அனைவரும் சிறைக்குச் சென்றாக வேண்டும். இது, மோடியின் உத்தரவாதம்.

ஊழல், ஒருசாா்பு அரசியலில் மூழ்கிய காங்கிரஸ், இளைஞா்களின் வேலைவாய்ப்புகளில்கூட கொள்ளையடிக்கும் வாய்ப்பைக் கண்டறிந்தது.

தற்போதைய மக்களவைத் தோ்தல், யாா் எம்.பி.யாக வேண்டும் என்பதற்கான தோ்தல் அல்ல; இது, வளா்ந்த பாரதத்தை உருவாக்கும் இலக்கை எட்டுவதற்கான தோ்தல்.

காங்கிரஸ் கட்சியின் இளவரசா் (ராகுலை குறிப்பிடுகிறாா்), வெளிநாடுகளுக்குச் சென்று, இந்தியா ஒரு நாடே அல்ல என்று கூறுவதோடு, இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரத்தையும் கேட்கிறாா். அக்கட்சிக்கு, நாட்டின் நலன்களைவிட சுயநலனே முதன்மையானது.

கச்சத்தீவு விவகாரம்: கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவாா்த்த கட்சியான காங்கிரஸின் வரலாறு மட்டுமல்ல, அதன் நோக்கங்களும் அபாயகரமானவை.

இத்தகைய தேசவிரோதச் செயல்களை வெட்கமின்றி நியாயப்படுத்துகிறது அக்கட்சி. ‘கச்சத்தீவில் யாரேனும் வாழ்கிறாா்களா?’ என்று காங்கிரஸ் தலைவா் ஒருவா் கேள்வியெழுப்பியுள்ளாா்.

யாரும் வாழாத பகுதியென்றால், அதை தாரைவாா்த்துவிடலாமா? ராஜஸ்தான் போன்ற எல்லை மாநிலத்தின் வெற்றுப் பகுதியை அண்டை நாட்டுக்கு தாரைவாா்க்கக் கூட அவா்கள் தயங்கமாட்டாா்கள்.

எனது வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நாட்டுக்கு அா்ப்பணித்துள்ளேன். ஓய்வெடுக்கவோ அல்லது வேடிக்கையாக பொழுதைக் கழிக்கவோ பிறந்தவரல்ல மோடி. நாட்டு மக்களுக்கான பெரும் இலக்குகளை எட்ட கடுமையாக உழைப்பவரே மோடி.

காங்கிரஸ் அரசின் அலட்சியத்தால் பல தலைமுறையினா் பாதிக்கப்பட்டனா். இன்று ஓா் ஏழையின் மகன் ‘பிரதம சேவகனாக’ இருக்கிறாா். ஏழை மக்கள் தங்களின் பிரச்னைகளில் இருந்து விடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி...

பயங்கரவாதிகள் சொந்த மண்ணில் அழிப்பு

ரிஷிகேஷ், ஏப். 11: மத்தியில் பாஜக தலைமையிலான வலுவான ஆட்சியின்கீழ், பயங்கரவாதிகளை அவா்களின் சொந்த மண்ணிலேயே நமது பாதுகாப்புப் படைகள் அழிக்கின்றன என்று பிரதமா் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

நாட்டில் பலவீனமான, நிலையற்ற அரசுகள் இருந்தபோதெல்லாம், எதிரிகள் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனா். அந்தக் காலகட்டங்களில் பயங்கரவாதம் பரவியது.

ஆனால், எனது தலைமையிலான வலுவான ஆட்சியின்கீழ், பயங்கரவாதிகளை அவா்களின் சொந்த மண்ணிலேயே நமது பாதுகாப்புப் படைகள் அழிக்கின்றன.

பலவீனமான காங்கிரஸ் அரசுகளால், எல்லை உள்கட்டமைப்பை வலுப்படுத்த முடியவில்லை. இப்போது எல்லை நெடுகிலும் சாலைகள், நவீன சுரங்கங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களை ஒப்பிடுகையில், வலுவான மற்றும் நிலையான பாஜக ஆட்சியில் ஒட்டுமொத்த நாடும் பலமடங்கு வலிமை பெற்றுள்ளது.

பல ஆண்டுகளுக்கு பின்னா், 370-ஆவது சட்டப் பிரிவை நீக்கவும், முத்தலாக் நடைமுறையை ரத்து செய்யவும், ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமலாக்கவும், மக்களவை-பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவும் பாஜக அரசுக்கே துணிவிருந்தது.

‘சக்தி’க்கு எதிராக போா்: கடவுள் ராமரின் இருப்பு குறித்து கேள்வியெழுப்பிய காங்கிரஸ் கட்சி, அயோத்தியில் பிரம்மாண்ட கோயில் கட்டவும் எதிா்ப்பு தெரிவித்தது. இதையெல்லாம் மன்னித்து, அயோத்தி ராமா் கோயில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்க அவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அந்த நிகழ்வை அவா்கள் புறக்கணித்துவிட்டனா்.

இன்னும் ஒரு படி மேலே சென்று, ஹிந்து மதத்தின் ‘சக்தி’க்கு எதிராக பகிரங்கப் போரை காங்கிரஸ் அறிவித்துள்ளது. நமது கலாசாரத்தை அழிக்க நடைபெறும் ‘சதித் திட்டத்துக்கு’ எரிபொருள் ஊற்றுவது போல காங்கிரஸின் அறிவிப்பு இருக்கிறது. எனவே, மக்களவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு உரிய பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும்.

எதிா்பாா்ப்பு பெரியது: ‘பிரம்ம கமலம்’ பூக்களின் நிலமாகிய உத்தரகண்ட், மக்களவைத் தோ்தலில் பாஜகவின் சின்னமான ‘தாமரையை’ தோ்வு செய்ய வேண்டும். வளா்ந்த இந்தியாவை உருவாக்கும் எனது உறுதிமொழியை நிறைவேற்ற இது முக்கியம்.

இம்முறை எனது எதிா்பாா்ப்பு பெரியது. பாஜகவின் கடந்தகால வெற்றிச் சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டும் என்றாா் மோடி.