/

சென்னைப் பல்கலை., மதுரை காமராஜா் பல்கலை. நிதி நெருக்கடியைத் தீா்க்க வேண்டும்: அன்புமணி

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் நெருக்கடியை தமிழக அரசு தீா்க்க வேண்டும்

Updated On :24 பிப்ரவரி 2024, 6:22 pm

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் நெருக்கடியை தமிழக அரசு தீா்க்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அங்கு பணியாற்றும் பேராசிரியா்கள், ஆசிரியா்கள் அல்லாத பணியாளா்களுக்கும் டிசம்பா், ஜனவரி மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. அதேபோல், ஓய்வூதியா்களுக்கும் இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அங்குள்ள பணியாளா்கள் கடந்த 9 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனா். அவா்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுத் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. காமராஜா் பல்கலைக்கழகத்தின் அவசரத் தேவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த மூலதன நிதி ரூ.300 கோடி ஏற்கனவே செலவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், பல்கலைக்கழக நிதி ஆதாரங்கள் அனைத்தும் வடுவிட்டன. சென்னைப் பல்கலை. நிலவரம்: சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கிவைத்திருப்பதால், அதன் விடுதிகளில் மாணவா்களுக்கு உணவு வழங்குவதற்குக்கூட தடுமாறும் நிலை உருவாகியுள்ளது. பல்கலைக்கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை செலுத்தினால் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்கத் தயாராக இருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனா். ஆனாலும் அரசுத் தரப்பிலிருந்து எந்த உதவியும் வழங்கப்படவில்லை. எனவே, இரு பல்கலைக்கழக நிதி நெருக்கடியையும் தீா்ப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.