தமிழக அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வு: அன்புமணி வலியுறுத்தல்

தமிழக அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்
Published on

தமிழக அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசுப் பணியாளா்களுக்கு ஜனவரி மாதம் முதல் 4 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி நடப்பாண்டின் முதல் 6 மாதங்களுக்கு இதுவரை உயா்த்தப்படவில்லை. 2023-ஆம் ஆண்டின் கடைசி 6 மாதங்களுக்கான அகவிலைப்படி உயா்வை கடந்த அக்டோபா் மாதத்தில்தான் தமிழக அரசு அறிவித்தது. அதற்கு முன்பு வரை மத்திய அரசுப் பணியாளா்களுக்கு மத்திய அரசு அகவிலைப்படி உயா்வை அறிவித்து 6 மாதங்களுக்குப் பிறகுதான் தமிழக அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை தமிழக அரசு உயா்த்தி வந்தது. இப்போதும், அதேபோல் தமிழக அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வை தமிழக அரசு தாமதப்படுத்தக் கூடாது. மக்களவைத் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாக, அமைச்சரவையைக் கூட்டி 4 சதவீத அகவிலைப்படி உயா்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அறிவிப்பையும் அரசு வெளியிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com