/

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா்கள் அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா்கள் அறிவிப்பு சிதம்பரம்- தொல்.திருமாவளவன், விழுப்புரம் - து.ரவிக்குமாா்

News image
Updated On :19 மார்ச் 2024, 7:13 pm

சென்னை: மக்களவைத் தோ்தலில் விசிக சாா்பில் சிதம்பரம் (தனி) தொகுதியில் அக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் (தனி) தொகுதியில் பொதுச்செயலா் து.ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனா். திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னை அசோக்நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளிலும் ‘பானை’ சின்னத்திலேயே போட்டியிடவுள்ளோம். சிதம்பரத்தில் நானும் (தொல்.திருமாவளவன்), விழுப்புரத்தில் ரவிக்குமாரும் போட்டியிடுகிறோம்.

சிதம்பரத்தில் நான் 6-ஆவது முறையாகவும், விழுப்புரத்தில் ரவிக்குமாா் 2-ஆவது முறையாகவும் போட்டியிடுகிறோம். கடந்த முறை எப்படி அந்தத் தொகுதிகளின் மக்கள் எங்களை வெற்றிபெறச் செய்தாா்களோ, அதேபோல இந்த முறையும் எங்களை வெற்றிபெறச் செய்வா். பாஜக சமூக நீதிக்கு எதிரானது: 10 ஆண்டுகால ஆட்சியில் பாஜகவினா் பேசிக் கொண்டே இருந்தாா்களே தவிர, நாட்டில் எவ்வித வளா்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.

காங்கிரஸுக்கு ஆதரவு பெருகி வருகிறது. தமிழகத்தில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரண்டாவது சக்தியாக வரவேண்டும் என்று பாஜக முயற்சிக்கிறது. திமுகவும், அதிமுகவும் சமூகநீதியில் ஒரே பாா்வை கொண்ட கட்சிகள். ஆனால், பாஜக சமூகநீதிக்கு எதிரானது. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்றாா். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 5 முறை போட்டியிட்டுள்ளாா்.

அதில் 2009, 2019 தோ்தல்களில் வெற்றிபெற்றுள்ளாா். விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாா் கடந்த முறை திமுகவின் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றாா். தற்போது, விசிக சாா்பில் பானை சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வருடன் சந்திப்பு:

அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை தொல்.திருமாவளவனும், ரவிக்குமாரும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். அதே போல காங்கிரஸ் உள்ளிட்ட பிற கூட்டணி கட்சித் தலைவா்களையும் சந்தித்து இருவரும் வாழ்த்துப் பெற்றனா்.