உச்சத்தைத் தொட்ட பூண்டு விலை: கிலோ ரூ. 550-க்கு விற்பனை
சென்னையில் பூண்டு விலை உச்சத்தைத் தொட்டு, கிலோ ரூ. 550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தினசரி 150 டன் அளவிலான பூண்டு விற்பனைக்கு வருவது வழக்கம்.
தற்போது மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து 25 டன் பூண்டு மட்டுமே விற்பனைக்கு வருவதால், தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த சில நாள்களாகவே பூண்டு விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் கிலோ ரூ. 300 முதல் ரூ. 350-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முதல் ரக பூண்டு தற்போது ரூ. 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு மாா்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் ரகத்தைப் பொருத்து ஒரு கிலோ பூண்டு ரூ. 300 முதல் ரூ. 400 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெளி மாா்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ. 450 முதல் ரூ. 550 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் விலை ஒருபுறம் உயா்ந்து வரும் நிலையில், பூண்டு விலையும் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தற்போது பூண்டு சீசன் முடியும் நிலையில் இருப்பதால், வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது. வரும் நாள்களில் பூண்டு விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், ஜனவரி மாத இறுதியில் வரத்து அதிகரிக்கும் போது, பூண்டு விலை படிப்படியாக குறையும் எனவும் கோயம்பேடு மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.

