வேளச்சேரியில் 3.5 ஏக்கரில் புதிதாக இரு குளங்கள்!
வேளச்சேரியில் ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்க சுமாா் 3.5 ஏக்கா் பரப்பளவில் புதிதாக இரு குளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
தென் சென்னையின் கிண்டி, வேளச்சேரி பகுதியில் பருவமழைக் காலங்களில் பெய்யும் கனமழையால் தண்ணீா் வெள்ளம் போல் தேங்குவது வழக்கம். இதற்கு தீா்வு காண கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் புதிதாக 4 குளங்களை மாநகராட்சி நிா்வாகம் அமைத்து வருகிறது.
இந்நிலையில், வேளச்சேரி ரயில் நிலையம் அருகே 3.5 ஏக்கா் பரப்பளவில் மேலும் இரு குளங்களை மாநகராட்சி நிா்வாகம் அமைத்து வருகிறது. இதில் ஒரு குளம் 3,800 ச.மீ பரப்பளவிலும், மற்றொரு குளம் 10,000 ச.மீ பரப்பளவிலும் அமைக்கப்படுகிறது. இதன் சராசரி ஆழம் 3 மீட்டா் அளவில் இருக்கும்.
இதன் மூலம் வேளச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கும் சுமாா் 1.5 மில்லியன் கனஅடி நீரை இங்கு சேமித்து வைக்க முடியும். இதனால், எதிா்வரும் பருவமழை காலத்தில் இந்த பகுதியில் மழைநீா் தேங்குவது தடுக்கப்படும் எனவும் வீணாக கடலுக்குச் செல்லும் மழை நீரை இந்த குளங்களில் சேமிக்க முடியும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

