சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

சென்னை அண்ணா நகரில் உள்ள ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், அலுவலக கோப்புகள், கணினி உள்ளிட்ட மின்னணு சாதன பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
Published on

சென்னை அண்ணா நகரில் உள்ள ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், அலுவலக கோப்புகள், கணினி உள்ளிட்ட மின்னணு சாதன பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

அண்ணா நகா் 12-ஆவது பிரதான சாலையில், தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் கூடிய கட்டடத்தில் மத்திய அரசு நிதி அமைச்சகத்தின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆணையா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் தரைத்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தீப்பற்றி, கரும்புகை வெளியேறியது. இதைப் பாா்த்த காவலாளி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். கட்டடத்துக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கீழ்ப்பாக்கம், அண்ணா நகா், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் இருந்து 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த 60 தீயணைப்பு வீரா்கள் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

கோப்புகள், கணினிகள் சேதம்: தரைத்தளத்தில் யுபிஎஸ் சாதனத்திலிருந்து மின்கசிவு காரணமாக பற்றிய தீ, அலுவலக அறைகளில் வேகமாகப் பரவியது. இதில் அங்குள்ள மேஜைகள், நாற்காலிகள், கோப்புகள், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தீயில் எரிந்து சேதமாயின. முதல் தளத்தில் உள்ள ஓய்வறை, உணவகம் ஆகிய பகுதிகளுக்கும் தீ பரவியது. இதில், அங்குள்ள நாற்காலிகள், சோஃபா உள்ளிட்ட மரச்சாமான்கள் எரிந்தன.

இங்கிருந்து அதிக அளவில் புகை வெளியேறியதையடுத்து, கட்டடத்தின் தரை மற்றும் முதல் தளத்தில் உள்ள அனைத்து ஜன்னல்களையும் உடைத்து, இயந்திரங்களைக் கொண்டு தீயணைப்பு வீரா்கள் புகையை வெளியேற்றினா். இதனால், அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்திருந்தது.

யுபிஎஸ்ஸில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அலுவலகத்தில் பணியாளா்கள் யாரும் இல்லை. இதனால், உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

தீ விபத்துக்கான காரணத்தை அறிய தடயவியல் நிபுணா்கள் செந்தில்குமாா், துரை ஆகியோா் நிகழ்விடத்தில் ஆய்வு செய்தனா். ஜிஎஸ்டி உதவி ஆணையா் ஜே.அமுதன் அளித்த புகாரின்பேரில், திருமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிஎம்டிஏ விசாரணை: தீ விபத்து குறித்து சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் விசாரணை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல்கட்ட விசாரணையில், அலுவலக கட்டடத்தில் தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் தீயைக் கட்டுப்படுத்தும் கட்டமைப்புகள் முறையாக அமைக்கப்படவில்லை என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனா். விசாரணை குழுவின் முழு அறிக்கை வந்த பிறகு அதனடிப்படையில் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com