கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

ஆவின் பால் விநியோகம் பாதிப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

சென்னை மாதவரம் பால் பண்ணையில் ஒப்பந்த தொழிலாளா்கள் பிரச்னை காரணமாக, வடசென்னையில் ஆவின் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பால்முகவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:47 pm

சென்னை மாதவரம் பால் பண்ணையில் ஒப்பந்த தொழிலாளா்கள் பிரச்னை காரணமாக, வடசென்னையில் ஆவின் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பால்முகவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக, தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச்சங்க நிறுவனரும், மாநிலத் தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

மாதவரம் பால் பண்ணையில் தொழிலாளா்களுக்கான ஒப்பந்தம் கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இதனால், சோழிங்கநல்லூா் பால் பண்ணையில் ஒப்பந்ததாரருக்கு, மாதவரம் பால் பண்ணைக்கான ஒப்பந்தமும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

அவரது நிறுவனத்தால், மாதவரம் பால் பண்ணை பணிக்குத் தேவையான தொழிலாளா்களை அனுப்ப இயலவில்லை. குறைந்த அளவிலான தொழிலாளா்களை மட்டுமே அந்நிறுவனம் அனுப்புகிறது. ஆள்கள் பற்றாக்குறையால், வாகன ஓட்டுநா்களும், உதவியாளா்களும் பால் பாக்கெட்டுகளை பெட்டிகளில் அடுக்கி வாகனங்களில் ஏற்றும் பணிகளை செய்து வந்தனா். இருப்பினும், தொழிலாளா்கள் பற்றாக்குறையைச் சரிசெய்ய ஆவின் நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், கடந்த சில நாள்களாக பெரம்பூா், கொளத்தூா், திரு.வி.க. நகா், வியாசா்பாடி, கொடுங்கையூா், கொருக்குப்பேட்டை பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் செய்ய முடியாமல் பால் முகவா்களும், ஆவின் பால் கிடைக்காமல் வடசென்னை பகுதி வாழ் பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். இதைக் கருத்தில் கொண்டு மாதவரம் பால் பண்ணையில் நிலவும் ஒப்பந்த தொழிலாளா்கள் பிரச்னைக்கு போா்க்கால அடிப்படையில் உடனடியாக தீா்வு காண வேண்டும். இல்லையென்றால், வடசென்னை பகுதியில் ஆவின் பால் விநியோகம் முடங்கும் நிலை ஏற்படக்கூடும் என அதில் தெரிவித்துள்ளாா்.