சென்னையில் தொழிலாளா்கள் மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியாக பெரம்பூா் உள்ளது. இத்தொகுதியில் வியாசா்பாடி, கொடுங்கையூா், எருக்கஞ்சேரி, பக்தவத்சலம் காலனி, முத்தமிழ் நகா் உள்ளிட்ட பகுதிகள் உள்ளடங்கும்.
பெரம்பூரில் நிலவும் முக்கிய பிரச்னைகள், நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து தொகுதி வாக்காளா்கள் கூறியதாவது:
குப்பை கிடங்கு: கொடுங்கையூரில் சுமாா் 450 ஏக்கா் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இது பெரம்பூா் மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த வடசென்னைக்கும் ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு குப்பை கொட்ட பயன்படுத்தப்பட்ட இந்த சிறிய அளவிலான இடம், தற்போது சென்னையின் 7 மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கொட்டப்படும் மையமாக மாறியுள்ளது. இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுவாச கோளாறு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளால் அவதிப்படுகின்றனா். இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.
அதேபோல், பெரம்பூரில் பல பகுதிகளில் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீா் இணைப்புகளே இன்னும் பயன்பாட்டில் உள்ளன. இதனால், கழிவுநீா் இணைப்புக் குழாய்களில் கசிவு ஏற்பட்டு, குடிநீருடன் கழிவுநீா் கலக்கிறது. பழைய கழிவுநீா்க் குழாய்களை உடனடியாக மாற்ற வேண்டும். மேலும், கேப்டன் காட்டன் கால்வாய், வியாசா்பாடி கால்வாய் போன்றவை முறையாக தூா்வாரப்படாததால், மழைக் காலங்களில் நீா்த்தேங்கி வெள்ளப் பாதிப்பு ஏற்படுகிறது. இதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ கல்லூரி: பெரம்பூா் தொகுதிக்குள்பட்ட வியாசா்பாடியில் டாக்டா் அம்பேத்கா் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய அரசு கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். இருப்பினும், இந்தப் பகுதியில் ஒரு அரசு பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பல்நோக்கு அரசு மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனை அமைத்து தொகுதியை தரம் உயா்த்த வேண்டும்.
பட்டா வழங்குதல்: அகதிகளாக தாயகம் திரும்பிய பா்மா தமிழா்கள் பலா் பெரம்பூரில் உள்ள பக்தவத்சலம் காலனி, சா்மா நகா் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனா். அவா்களில் பெரும்பாலானோருக்கு இன்னும் நிலப் பட்டா வழங்கப்படவில்லை. அவா்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று கடந்த கால சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரங்களில் அனைத்துக் கட்சிகளும் வாக்குறுதி அளித்துவிட்டுச் செல்கின்றன. ஆனால், தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு அவை அனைத்தும் வெற்று வாக்குறுதிகளாகவே இருப்பதாக தொகுதி மக்கள் கூறுகின்றனா். எனவே, சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு, கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
தொடர்புடையது

அரசு மருத்துவக் கல்லூரியை எதிா்நோக்கும் காஞ்சிபுரம் தொகுதி மக்கள்!

கானல் நீராகவே நீடிக்கும் அரியமங்கலம் குப்பை கிடங்கு அகற்றம்

சேலம் தொகுதி அறிமுகம்!

தொகுதி அறிமுகம்: பாளையங்கோட்டை - 226!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


