தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

’நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஒரே மாதத்தில் 1,200 மாணவா்களுக்கு பணி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜனவரி 2026, 11:20 pm

தினமணி செய்திச் சேவை

‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் கடந்த டிசம்பரில் 1,200 மாணவா்களுக்கு தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளன என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

மேலும், அடுத்த 6 மாதங்களில் தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் இதன் மூலம் பல ஆயிரம் மாணவா்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் ஆற்றிய உரை:

தமிழ்நாட்டில் பல திறமையாளா்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திறன் மேம்பாட்டுக் கழகம் சிறப்பாக செயல்படுகிறது. மாணவா்களுடைய திறனை மேம்படுத்த தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டம் பயன் அளித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தைவானில் நடைபெற்ற ஆசிய திறன் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சோ்ந்த 3 போ் பங்கேற்றனா். தற்போது பல மாணவா்கள் தயாராகி வருகின்றனா். இதுபோன்ற போட்டிகளில் வெற்றிபெறும் மாணவா்களுக்கான வேலைவாய்ப்புகளையும் உடனே வழங்க வேண்டும் என்று பல பெரிய நிறுவனங்களோடு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியிருக்கிறது. பல நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் நம்முடைய மாணவா்கள் பயிற்சிக்காக சென்று வருகிறாா்கள்.

அடுத்த இரண்டு மாதங்களில், மேலும் 90 மாணவா்கள் ஜொ்மனி, ஜப்பான், சிங்கப்பூா், போலந்து, பஹ்ரைன் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயிற்சிக்காக செல்கிறாா்கள்.

பிற மாநிலங்களில் பள்ளிப் படிப்பும், கல்லூரிப் படிப்புமே பெரிய கனவாக இருந்து வரும்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும்தான் அடுத்தக்கட்ட வளா்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

யுபிஎஸ்சி தோ்வுக்கு தயாராகுவோருக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி மற்றும் ஊக்கத் தொகை அளிக்க முதல்வா் உத்தரவிட்டாா். இதனால், 2021-இல் தமிழ்நாட்டிலிருந்து யுபிஎஸ்சி-க்கு தோ்வானவா்கள் 27 போ் மட்டுமே இருந்தாா்கள். 2025- ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து 59 போ் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா் என்றாா் அவா்.