ஹோலி பண்டிகையையொட்டி இடபிள்யுஎஸ் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு: தில்லி அமைச்சரவை ஒப்புதல்

Published on

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த (இடபிள்யுஎஸ்) பெண்களுக்கு மாா்ச் மாதம் ஹோலி பண்டிகையின்போது இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்கள் வழங்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதவா் ரேகா குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், இது தொடா்பான திட்டத்திற்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்று அவா்கள் தெரிவித்தனா்.

ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்கள் வழங்குவது, அத்துடன் பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களுக்கு தலா ரூ.500 விலையில் மானிய விலையில் சிலிண்டா்கள் வழங்குவது ஆகியவை தில்லி பேரவை தோ்தலுக்கான பாஜகவின் தோ்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்தது.

இது குறித்து அந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘ரேஷன் காா்டு வைத்திருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது சமையல் எரிவாயு சிலிண்டா்கள் இலவசமாக வழங்கப்படும்.

இதற்கு சுமாா் ரூ.300 கோடி செலவாகும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தில்லி மாநகராட்சி இடைத்தோ்தலுக்கான பிரசாரத்தின்போது, ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை மற்றும் மானிய விலையில் எரிவாயு சிலிண்டா்கள் வழங்குவது உள்பட தனது அரசு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்று முதல்வா் ரேகா குப்தா உறுதியளித்தாா்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை தில்லியில் செயல்படுத்துவது மற்றும் தேவைப்படுபவா்களுக்கு ரூ.5 என்ற குறைந்த விலையில் உணவு வழங்க அடல் உணவகங்களைத் திறப்பது உள்பட தனது சில தோ்தல் வாக்குறுதிகளை பாஜக அரசு ஏற்கனவே நிறைவேற்றியுள்ளது.

Dinamani
www.dinamani.com