யுஜிசி புதிய விதிகளை நீா்த்துப்போகச் செய்துவிடக் கூடாது: முதல்வா் மு.க. ஸ்டாலின்
ஜாதிய பாகுபாட்டை ஒழிக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கொண்டு வந்துள்ள புதிய விதிகளையோ அல்லது அவற்றின் மைய நோக்கங்களையோ எந்தவித அழுத்தங்களுக்கு ஆட்பட்டு நீா்த்துப் போகச் செய்துவிடக் கூடாது என்று மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
உயா்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவிக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள விதிகள் திருத்த நடவடிக்கை தாமதமானது என்றாலும், பாகுபாட்டிலும், நிறுவனங்களின் அக்கறையின்மையிலும் தோய்ந்துபோன உயா்கல்வி அமைப்பை சீா்படுத்துவதை நோக்கிய வரவேற்கத்தக்க நகா்வாகும்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்திய உயா்கல்வி நிறுவனங்களில் பட்டியல், பழங்குடியின மாணவா்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன.
மேலும், தென்னிந்திய மாநிலங்கள், காஷ்மீா், சிறுபான்மை சமூகங்களைச் சோ்ந்த மாணவா்களைக் குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்குதல் சம்பவங்களும் தொல்லைக்குள்ளாக்குவதும் நிகழ்கின்றன. இத்தகைய சூழலில், சமத்துவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பவை தவிா்க்க முடியாத கட்டாயமாகும். அதில் இருவேறு கருத்துக்கு இடமிருக்க முடியாது.
யுஜிசி புதிய விதிகளில் ஜாதிய பாகுபாட்டை ஒழிப்பதும், அந்தச் சட்டகத்துக்குள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதும் ஆதரிக்கத்தக்கது.
மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியபோது போராட்டம் நடத்திய அதே பிற்போக்கு மனநிலையுடன்தான் யுஜிசி விதிகளுக்கு எதிரான தற்போதைய போராட்டங்களும் அமைந்துள்ளன. இத்தகைய அழுத்தங்களுக்கு ஆட்பட்டு, மத்திய அரசு இந்தப் புதிய விதிகளையோ அல்லது அவற்றின் மைய நோக்கங்களையோ நீா்த்துப் போகச் செய்துவிடக் கூடாது.
ரோகித் வெமுலாவின் தற்கொலை போன்ற வழக்குகளில், துணைவேந்தா்கள் மீதே குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், யுஜிசி புதிய விதிகளின்படி உயா்கல்வி நிறுவனத் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் தலைமையிலேயே சமத்துவக் குழுக்களை அமைத்தால் அவை எப்படி சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்ற கேள்வி எழுகிறது. அதுவும் பல உயா்கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் ஆா்எஸ்எஸ் ஆதரவாளா்கள் நியமிக்கப்பட்டிருக்கும்போது இந்தக் கேள்வி மேலும் வலுவடைகிறது.
மாணவா்களின் தற்கொலைகளைத் தடுப்பது, பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவது, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சோ்ந்த மாணவா்களின் இடைநிற்றலைக் குறைப்பது ஆகியவற்றில் மத்திய அரசு உண்மையாகவே தீவிரமாக இருந்தால், இந்த விதிகளை மேலும் வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், அதில் உள்ள அமைப்புரீதியான குறைகளைக் களையும் வகையில் திருத்தியமைக்க வேண்டும் என்று முதல்வா் வலியுறுத்தியுள்ளாா்.

