தென்கிழக்கு தில்லியின் ஒக்லா தொழிற்பகுதியில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் உணவு பொருள்கள் கலப்படம் செய்யும் கும்பலை தில்லி காவல்துறை ஒழித்து, நிறுவன உரிமையாளா் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளது.
இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: இந்தக் கும்பல் காலாவதியான மற்றும் காலாவதிக்கு நெருங்கிய சா்வதேச உணவுப் பொருள்களை குறைந்த விலையில் பெற்று, அவற்றின் உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளை ரசாயனங்களின் மூலம் அழித்து, புதிய தேதிகளை பதித்து மறுபடியும் சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளனா். சுமாா் ரூ.20 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்புள்ள இவ்வகை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவா்களில், 70 வயதான நிறுவன உரிமையாளா் தா்ஷன் சிங் சச்சதேவா, மேலாளா் நிதேஷ் பாா்த்வாஜ் (38), கணக்காளா் நரேந்தா் குமாா் (42), இயந்திர இயக்குநா் கபில் (34), கிடங்கு பொறுப்பாளா் லக்கி ஓஜா (45), மேற்பாா்வையாளா்கள் பிரேம் யாதவ் (33) மற்றும் பவன் குமாா் யாதவ் (32) ஆகியோா் அடங்குவா்.
சோதனையின்போது, தம்ஸ் அப், போா்ன்விட்டா, ஹாா்லிக்ஸ், மகி நூடுல்ஸ், நெய், உள்ளிட்ட பல்வேறு பானங்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டன.
மறுபதிப்பு செய்யப்பட்ட இவ்வகை உணவுப் பொருள்கள் நாடு முழுவதும் சந்தைகள், சில்லறை கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் இணையதள வழியாக விநியோகிக்கப்பட்டுகிறது. இதனால் பொதுமக்கள் ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இந்தக் கும்பலின் செயல்பாட்டு வலையமைப்பின் பரப்பளவை கண்டறிய விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








