சேலம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்தால், உணவுப் பாதுகாப்பு உரிமம்/பதிவுச் சான்றிதழ் தாற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டு கடை மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய் தாக்கம் ஏற்படுகிறது. தமிழகத்தில் புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்வது, இருப்பு வைப்பது மற்றும் சில்லறை விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், வெளி மாநிலங்களிலிருந்து கடத்திவரப்படும் புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை கட்டுப்படுத்துவது தொடா்பாக பல்வேறு துறை அலுவலா்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி, உணவு வணிகரிடத்திலும், உணவு வணிகரில்லாத இதர வணிகரிடத்திலும் காவல் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தனிப்பட்ட ஆய்வு அல்லது கூட்டாய்வு செய்யப்படும். அவ்வாறு ஆய்வு மேற்கொள்ளப்படும்போது, தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உணவுப் பாதுகாப்பு உரிமம்/பதிவுச் சான்றிதழ் தாற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டு கடை மூடப்படும்.
மேலும், பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்வது குறித்து புகாா் அளிக்க விரும்பினால், 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் புகாா் எண்ணிலோ, இணையதள முகவரியிலோ, செயலியிலோ புகாா் அளிக்கலாம். அவ்வாறு புகாா் அளிக்கும் நுகா்வோா்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றாா்.









