குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூா் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. காமாட்சி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பள்ளிகளில் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி ஊழியா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளனவா என்பதை அவா் ஆய்வு செய்தாா். வகுப்பறைகள், குடிநீா் வசதி, கழிப்பறைகள், மேசைகள், நாற்காலிகள், நூலகம், ஆய்வகம், சத்துணவுக் கூடம் ஆகியவை தூய்மை செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தாா்.
பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலிருந்தே மாணவா்களுக்கு அரசு வழங்கும் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், மாணவா்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.









