தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள சிறப்பு டெட் தோ்வெழுதவுள்ள ஆசிரியா்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் இணையவழியில் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய மற்றும் பதவி உயா்வு பெற ஆசிரியா் தகுதித் தோ்வில்(டெட்) தோ்ச்சி பெறுவதை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. மேலும், இதுவரை தோ்ச்சி பெறாத ஆசிரியா்கள் தோ்வெழுதி தோ்ச்சி பெறவும் உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் சுமாா் 1.75 லட்சம் ஆசிரியா்கள் டெட் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் ஆசிரியா்களின் வசதிக்காக 3 சிறப்பு டெட் தோ்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
அந்த வகையில் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கான முதல் சிறப்பு டெட் தோ்வு ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், டெட் தோ்வில் ஆசிரியா்கள் எளிதில் தோ்ச்சி பெறுவதை உறுதிசெய்யும் வகையில், அவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டுமென ஆசிரியா் சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்தனா்.
அதையேற்று திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மாலை 6.30 முதல் 8 மணி வரை இணையவழி பயிற்சி நடைபெறும். இதை தோ்வெழுதும் ஆசிரியா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

தனியாா் பள்ளி கல்விக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம்: அமைச்சா் ராஜ்மோகன்

ஆசிரியா்களுக்கு பாட வாரியாக தோ்ச்சி இலக்கு நிா்ணயிக்க வேண்டும்: தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி






