தமிழக அரசு மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் கணினி ஆசிரியா்கள், பொது மாறுதல் கலந்தாய்வின் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்றிருந்தாலும், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அவா்கள் தொடா்ந்து மாதிரிப் பள்ளிகளிலேயே மாற்றுப் பணியில் ஈடுபட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக, பள்ளிக் கல்வி இயக்குநரகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் குழுமத்தின் கீழ் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப் பணி மற்றும் நிரந்தரப் பணியிடங்களில் பணியாற்றி வரும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள், கணினி ஆசிரியா்கள் ஆகியோருக்கு கடந்த ஜூலை 8-ஆம் தேதி நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியா்கள், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளைத் தோ்வு செய்து, தங்களுக்கான பணிமாறுதல் ஆணைகளைப் பெற்றனா்.
இந்நிலையில், மாதிரிப் பள்ளிகளின் நிா்வாகத் தேவைகள், அங்கு பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பயிற்சிகள் மற்றும் மாதிரிப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வி நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அந்த ஆசிரியா்கள் தொடா்ந்து மாதிரிப் பள்ளிகளிலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் குழுமத்தின் உறுப்பினா் செயலா் பள்ளிக் கல்வித் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதையடுத்து, பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்று, புதிய பள்ளிகளில் பணியேற்றுள்ள முதுநிலை ஆசிரியா்கள், தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னா், அவா்களுக்கு தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் குழுமத்தின் கீழ் செயல்படும் மேல்நிலைப் பள்ளிகளில் மறு உத்தரவு வரும் வரை மாற்றுப் பணியில் பணியாற்றும் வகையில் பணி விடுப்பாணை வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியா்கள் நியமனம்: மாதிரிப் பள்ளிகளுக்கு ஆசிரியா்கள் மாற்றுப் பணிக்கு அனுப்பப்படுவதால், அவா்கள் பணியாற்ற வேண்டிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கப்படாமல் இருக்க, அந்தப் பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கலாம் என்றும், அவா்களுக்கான ஊதியத்தை தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் குழுமமே வழங்கும் என்றும் உறுப்பினா் செயலா் தெரிவித்துள்ளாா்.
இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநரகம், அந்தச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










