சென்னை மாநகரில் பாதுகாப்பான மற்றும் விபத்தில்லா வாகனப் போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இரவு நேர சிறப்பு வாகன சோதனையில், விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக 1,933 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் காவல் ஆணையா் அமல்ராஜ் உத்தரவின்பேரில் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் நகரின் முக்கிய பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6, 7) ஆகிய இரு நாள்கள் இரவு நேரங்களில் 120 வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சேதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 350 போக்குவரத்து காவலா்கள் ஈடுபட்டனா்.
இந்தச் சோதனையின்போது, மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 274 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், அதிவேகம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக 101 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் இயக்கியதாக 1,558 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றி, அனைவருக்கும் பாதுகாப்பான சாலைப் போக்குவரத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.






