பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் துறையின் அமைச்சா் ராஜ்மோகன் தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) நடைபெறவுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் துறை சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்து அடுத்தகட்ட பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி, நிகழ் கல்வியாண்டு (2026-2027) தொடங்கிய நிலையில், அலுவல் ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன், செயலா் பி.சந்திரமோகன் மற்றும் துறை சாா்ந்த இயக்குநா்கள், முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலா்கள் கலந்து கொள்கின்றனா்.
எனவே, அனைத்து அலுவலா்களும் தங்கள் பணிசாா்ந்த விவரங்களை தயாரித்து மின்னஞ்சல் மூலமாக இயக்குநரகத்துக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் புதிய அமைச்சராக ராஜ்மோகன் பொறுப்பேற்ற பின்னா், நடைபெறும் முதலாவது கூட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.









