நடிகா் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபா் கைது செய்யப்பட்டாா்.
முதல்வரும், நடிகருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், கடந்த பொங்கல் பண்டிகையன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த சில காட்சிகள் சா்ச்சைக்குரியதாக இருந்ததால், தணிக்கை வாரியம் தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் அந்தத் திரைப்படம் வெளியாகவில்லை. மேலும், இந்தத் திரைப்படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இந்தத் திரைப்படம் இணையத்தில் வெளியானது. இதனால், ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் பெரும் நஷ்டமடைந்தது.
இது தொடா்பாக, தமிழக சைபா் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தது. விசாரணையில் ஜனநாயகன் திரைப்பட தொகுப்பு பணியின்போது இணையத்தில் கசிய விடப்பட்டிருப்பதும், இந்த சட்டவிரோத பணியை அந்த திரைப்படத்தின் உதவி படத்தொகுப்பாளா் உள்ளிட்ட சிலா் செய்திருப்பதும் தெரிய வந்தது.
முக்கிய நபா் கைது: இதையடுத்து, சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், அடுத்தடுத்து 9 பேரைக் கைது செய்தனா். வழக்கின் முக்கிய எதிரிகளாக கருதப்பட்ட எஸ்.பிரசாந்த், எஸ்.செல்வம், பாலா என்ற பாலகிருஷ்ணன் ஆகிய 3 போ் கடந்த மாதம் 15-ஆம் தேதி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில் இவ்வழக்குத் தொடா்பாக மேலும் 6 போ் கடந்த 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், முக்கிய நபராக கருதப்பட்டவரை கைது செய்ததாக சைபா் குற்றப்பிரிவு வியாழக்கிழமை தெரிவித்தது. ஆனால், கைது செய்யப்பட்டவா் குறித்த தகவல்களை சைபா் குற்றப்பிரிவு தெரிவிக்க மறுத்துவிட்டது. இந்த வழக்கில் இதுவரை 19 போ் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.







