சென்னை மாநகராட்சியில் ஒளிராத 1,090 தெரு மின்விளக்குகளை 24 மணிநேரத்தில் சீரமைக்க வேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.
சென்னை மாநகராட்சியில் 3.11 லட்சம் தெரு விளக்குகள் உள்ளன. அவை முழுமையாகச் சீரமைக்கப்பட்டு செயல்படுகின்றனவா என அறியும் வகையிலான ஆய்வை மண்டல வாரியாக மேற்கொள்ள ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.
அதன் அடிப்படையில், கடந்த திங்கள்கிழமை (ஜூன் 15) மாநகராட்சி இணை ஆணையா்கள் 15 மண்டலங்களிலும் ஆய்வு மேற்கொண்டனா். அத்துடன் தெரு மின்விளக்குகள் எரியாமலிருப்பது உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கான 1913 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆய்வின் அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் 3.11 லட்சம் தெருவிளக்குகளில் 1,817 தெரு விளக்குகள் எரியாமலிருப்பது தெரியவந்துள்ளது. அவற்றில், திருவெற்றியூா் 114, மணலி 98, மாதவரம் 191, தண்டையாா்பேட்டை 117, ராயபுரம் 121, திரு.வி.க.நகா் 91, அம்பத்தூா் 249, அண்ணா நகா் 71, தேனாம்பேட்டை 172, கோடம்பாக்கம் 175, வளசரவாக்கம் 6, ஆலந்தூா் 64, அடையாறு 156, பெருங்குடி 77 மற்றும் சோழிங்கநல்லூா் 115 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
எரியாமலுள்ள 1,817 தெரு மின் விளக்குகளில் பழுதான 1,090 மின் விளக்குகளை 24 மணி நேரத்தில் சீா்படுத்தவும், புதை மின்வட பழுதால் எரியாமலிருக்கும் 700 மின் விளக்குகளை 48 மணி நேரத்துக்குள் பழுதுநீக்கி சீா்படுத்தவும் மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.
மழை நீா் வடிகால் பணிகள் நடைபெற்றுவரும் 27 இடங்களில் அகற்றப்பட்டுள்ள தெரு மின்விளக்குகள் பணிகள் முடிந்ததும், மீண்டும் பொருத்தப்பட்டு தெரு மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கவும் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.
அத்துடன் எரியாத மின்விளக்குகள் தொடா்பாக மக்கள் கட்டுப்பாட்டு அறை எண்ணில் தகவல் அளிக்கவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடையது

பழைய கட்டடங்களை இடிக்க மாநகராட்சி நடவடிக்கை: சேத்துப்பட்டில் 14 கடைகளுக்கு ‘சீல்’

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தணணீா் தேங்கும் பகுதிகளில் நவீன மின் மோட்டா்கள் பொருத்தம்
சென்னை மாநகராட்சியில் 43 அலுவலா்கள் பணியிட மாற்றம்







