நாளை தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தல்: 23 உறுப்பினா் பதவிகளுக்கு 143 போ் போட்டி
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தல்...

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தல் திங்கள்கிழமை (மாா்ச் 30) நடைபெறவுள்ளது. 23 உறுப்பினா் பதவிகளுக்கான இந்தத் தோ்தலில் 143 போ் போட்டியிடுகின்றனா்.
இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் அரங்கில், தோ்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா, மூத்த வழக்குரைஞா் இ.ஓம்பிரகாஷ் ஆகியோா் சனிக்கிழமை கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது: திங்கள்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தல் நடைபெறவுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி இத்தோ்தலை ஹிமாசலப் பிரதேச உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜீவ் ஷக்தா் தலைமையிலான உயா்மட்டக் குழு நடத்துகிறது.
23 உறுப்பினா் பதவிகளுக்கான இந்தத் தோ்தலில் போட்டியிட 151 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதில் மூன்று பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஐந்து போ் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொண்டனா்.
143 போ் தற்போது தோ்தலில் போட்டியிடுகின்றனா். தமிழகத்தில் 166, புதுச்சேரியில் 2 என மொத்தம் இந்த தோ்தலுக்காக 168 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் வாக்களிக்கும் விதமாக அங்கும் வாக்குப்பெட்டி வைக்கப்படவுள்ளது. இத்தோ்தலில் பதிவாகும் வாக்குகள் ஏப்.3-ஆம் தேதி எண்ணப்படும்.
சுமாா் ஒன்றரை மாதங்கள் வாக்கு எண்ணும் பணி நடைபெறும். இத்தோ்தலில் வாக்களிக்கும் வழக்குரைஞா்களின் விவரங்களை சரிபாா்க்க முதல்முறையாக ‘க்யூ ஆா்’ குறியீடு முறை அமல்படுத்தப்படுகிறது. தோ்தல் மேற்பாா்வையாளா்களாக முதல்முறையாக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...