

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதியை பணியிடை நீக்கம், தகுதி நீக்கம் செய்யாதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாமக சார்பில் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் காஞ்சிபுரம் பச்சையப்பன் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக அரசின் மீது பாமக கூறிய ஊழல் புகார்கள் உண்மையாகி வருகின்றன. தமிழக அரசின் ஊழல் பட்டியலை அவ்வப்போது பாமக தெரிவித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி ஊழல் குறித்து அறிக்கை வெளியிட்டு, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். அப்போது இந்த புகாரை கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஊழல் வழக்கில் கணபதி இப்போது கைதாகியுள்ளார். இதன்மூலம், உண்மை வெளிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அரசு ஏன் அவரை தகுதிநீக்கமோ? பணி இடைநீக்கமோ செய்யவில்லை?. அவ்வாறு செய்தால், உயர்கல்வித்துறை முன்னாள், தற்போதைய அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு ஊழலில் தொடர்பு இருப்பது மக்களுக்கு தெரிந்துவிடும் என தமிழக அரசு அச்சப்படுகிறது.
இதில் ஊழல் புகார் பட்டியல்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் கடிதம் மூலமோ, நேரிலோ சென்று தமிழக ஆளுநரிடம் நினைவுபடுத்துவோம். அதுபோல், நீட் நுழைவுத் தேர்வு விஷயத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிராக அரசு செயல்பட்டு வருகிறது. காவிரி நீர் வராது என கூறிய சுப்பிரமணிய சுவாமி கருத்து உள்பட அவர் பேசும் எதையும் பெரிதாக பொருள்படுத்தக்கூடாது. மேலும், மருத்துவத் துறையில் நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் தரப்படுகின்றன. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை என்பது கண்துடைப்பு போன்றது என்றார் ராமதாஸ்.
பேட்டியின்போது பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.