விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் என நகர பொதுமக்களுக்கு திருத்தணி காவல் துறை சார்பில்
விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சேகர் திங்கள்கிழமை வழங்கினார்.
திருத்தணி கமலா திரையரங்கு அருகில், காவல் துறை சார்பில் விபத்து, மாசு மற்றும் அதிக ஒலியில்லாமல் தீபாவளி கொண்டாடுவது குறித்து நகர மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர்கள் பரந்தாமன், நிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்வில், திருத்தணி டிஎஸ்பி சேகர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினார். அவர் கூறியது:
இந்த தீபாவளியை விபத்து, மாசு இல்லாமல் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவமனை அருகிலும், நோயாளிகளிகள் வசிக்கும் பகுதிகளிலும் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கரி அமிலம் அதிகமாக உள்ள பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும். தொடர் சத்தத்துடன் வெடிக்கக் கூடிய சரவெடிகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை வெடிக்கும்போது காலணிகளை அணிந்திருக்க வேண்டும். அருகில் மணல், தண்ணீரை வைத்துக்கொள்ள வேண்டும்.
எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் மற்றும் உடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி பட்டாசு வெடிக்கக் கூடாது. வெடிக்காத பட்டாசுகளில் உள்ள கரிமருந்தை வெளியே எடுத்து கொளுத்தக் கூடாது என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து, திருத்தணி ரயில் நிலையம், பஸ் நிலையம், கமலா திரையரங்கம், பைபாஸ் சாலை, பஸ் டிப்போ உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திருத்தணி காவல் உதவி ஆய்வாளர்கள் குமார், இளங்கோ, காவலர் தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கிய டிஎஸ்.பி சேகர். உடன் போலீஸார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









