நடிகை சித்ரா தற்கொலை சம்பவம்: 2-ஆவது நாளாக கோட்டாட்சியா் விசாரணை

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக அவரின் கணவா் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் விசாரணை நடத்தினாா்.
Updated on
1 min read

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக அவரின் கணவா் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் விசாரணை நடத்தினாா்.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரது மரணம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

அதன் அடிப்படையில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்திடம் போலீஸாா் கடந்த சில நாள்களாக விசாரணை நடத்தி, கடந்த திங்கள்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில், ஹேம்நாத்தும், சித்ராவும் ஏற்கெனவே பதிவு திருமணம் செய்து கொண்டதால் சித்ராவின் மரணம் குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாய் வசந்தா ஆகியோரிடம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் விசாரணை மேற்கொண்டாா். முன்னதாக கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ கடந்த திங்கள்கிழமை சித்ராவின் தாயாா் விஜயா, தந்தை காமராஜ், மூத்த சகோதரி சரஸ்வதி, அண்ணன் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com