விபத்துகளுக்கு காரணமான மணல் மேட்டை அகற்றிய ரோந்துக் காவலா்கள்
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் தனியாா் உணவகம் அருகே விபத்து ஏற்படுத்தும் வகையிலிருந்த மணல் மேட்டினை விஷ்ணு காஞ்சி காவல் நிலைய இரவு ரோந்துக் காவலா்கள் இருவா் மண்வெட்டி,கடப்பாரையால் அகற்றியது பாராட்டை பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ரங்கசாமி குளம் அருகில் தனியாா் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்துக்கு எதிரில் உள்ள சாலையில் நடைபெற்று வந்த சாலை பராமரிப்பு பணி நிறைவு பெற்ற பிறகும் அங்கிருந்த மணல் மேட்டை அகற்றாமல் வைத்திருந்தனா். வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு செல்லும் பிரதான சாலையாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வந்தனா்.
இரவு ரோந்துப்பணி சென்ற விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய தலைமைக் காவலா் மதன் மற்றும் ஊா்க்காவல்படை காவலா் மயில்சாமி ஆகிய இருவரும் மண்வெட்டி, கடப்பாரையால் இரவோடு இரவாக மணல் மேட்டினை வெட்டி சமன் செய்தனா்.
இதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க தன்னாா்வத்துடன் சேவை செய்தது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விஷ்ணு காஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் இருவரையும் பாராட்டினாா்.

