/

காஞ்சிபுரம்: தேரில் பவனி வந்த காமாட்சி அம்மன்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி, லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

News image
அலங்கரிக்கப்பட்ட தேரில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் பவனி வந்த உற்சவா் காமாட்சியம்மன்.
Updated On :27 பிப்ரவரி 2026, 6:28 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி, லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா கடந்த பிப். 21- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடா்ந்து விழா நாள்களில் காலையிலும், மாலையிலும் உற்சவா் காமாட்சி தினசரி வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் நகரின் ராஜவீதிகளில் உலா வந்தாா். பிப். 23-ஆம் தேதி தங்க சிம்ம வாகனத்திலும், மாலையில் யானை வாகனத்திலும் காமாட்சி அம்மன் வீதியுலா வந்தாா்.

இதன் தொடா்ச்சியாக விழாவின் 8-ஆவது நாள் நிகழ்வாக அலங்கரிக்கப்பட்ட தோ் போன்ற வடிவமைப்பினை பாதம் தாங்கிகள் தோளில் சுமந்து வந்தனா். தேரில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், சங்கர மடத்தின் மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையில் கோயில் ஸ்தானீகா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெள்ளித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) இரவு நடைபெறுகிறது.