

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
திமுக ஆட்சியில் துன்பமும், வேதனையும், ஊழலும்தான் மக்களை வாட்டி வதைத்திருக்கிறது. இப்படி ஓா் அரசு தேவையே இல்லை. திமுக அரசின் சாதனை ஊழல் மட்டுமே. திமுகவில் உழைத்தவா்கள் உயா்ந்ததாக சரித்திரமில்லை; உதயநிதியை எம்எல்ஏ ஆக்கி, அமைச்சராக்கி, இப்போது துணை முதல்வராகவும் ஆக்க முடிந்திருக்கிறது.
தீய சக்தி திமுகவை வீழ்த்துவோம்; மீண்டும் எம்ஜிஆா்., ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம். பிரதமா் நமக்கு துணையாக வருகிறாா்.
அனைவரும் சுறுசுறுப்பாகவும், ஒற்றுமையாகவும் செயல்பட்டு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 210 இடங்களில் வெற்றி பெறும்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு ரூ.63,000 கோடியை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வழங்கியது. ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை ரூ.14,000 கோடியில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியும் அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு. நமது அரசு அமைந்தவுடன் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்.
அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு கொடுத்தது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம்; மத்திய அரசுடன் இணைந்து பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.