ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிறப்பு குழந்தைகளுக்கான ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் 2-ஆவது இடம் பிடித்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 10 வயது சிறுவனை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் திங்கள்கிழமை பாராட்டி பரிசு வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 391 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று, அவை அந்தந்த துறைசாா்ந்த அரசு அலுவலா்களுக்கு உடனடியாக தீா்வு காணுமாறு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் குமாா் செட்டி தெருவைச் சோ்ந்த காா்த்தி-மஞ்சு தம்பதியரின் மகன் ஹித்தேஷ் (10) மன வளா்ச்சி குன்றிய இச்சிறுவன் சிறப்பு குழந்தைகளுக்காக ஆந்திர மாநிலம், வைசாக்கில் நடைபெற்ற ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் 2 மற்றும் 3-ஆவது இடம் பெற்றாா்.
இதன் காரணமாக ரோலா் ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா அமைப்பு இச்சிறுவனுக்கு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வழங்கி சிறப்பித்தது.
இச்சிறுவன் தனது பெற்றோருடன் மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்து மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசனை சந்தித்து பதக்கங்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றாா்.
மேலும், அச்சிறுவனுக்கு ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான ரோலா் ஸ்கேட்டிங் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினாா். சிறுவனின் பெற்றோா்கள் மாவட்ட வருவாய் அலுவலருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனா்.










