

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை ஆவின் பால் விநியோகம் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் வேலூர் கிளை மூலமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆவின் பால் விநியோகம் நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக பால் விநியோகம் சரிவர நடைபெறவில்லை. இதில் கடந்த ஒரு வாரமாக தினமும் பல மணி நேரம் தாமதமாக பால் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இதில், செப்டம்பர் 1-ஆம் தேதி வியாழக்கிழமை காலை ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து 22 விநியோக வாகனங்கள் இயக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை காலையில் இதில் ஒரு வாகனம் கூட இயக்கப்படவில்லை.
வேலூர் மாநகர விநியோகஸ்தர்கள் மட்டும் தங்களது சொந்த வாகனங்களை கொண்டு பாலை ஏற்றிக்கொண்டு சென்று விட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஒரு வாகனம் கூட இயக்கப்படவில்லை. இதனால் பால் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். அனைத்து பொதுமக்களும் தனியார் பால் நிறுவனங்களை தேடி சென்றதால் தனியார் பால் விலை அதிகரித்து விற்கப்படுகிறது.
இதுகுறித்து அறிய ஆவின் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேச பல முறை முயற்சித்தும் அவர்களிடம் பேச இயலவில்லை. தமிழக அரசு போர்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.