வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரண தொகையை துரிதமாக வழங்க வேண்டும் என அரக்கோணம் கோட்ட வேளாண் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது..
அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கோட்டாட்சியா் ஆா்.பாத்திமா தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபகழக மண்டல மேலாளா் தேவிபிரியா, அரக்கோணம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஆனந்தன் மற்றும் வேளாண்துறை, மின்வாரியம், காவல்துறை அலுவலா்களும் மேலும் மாவட்ட வேளாண் விவசாயிகள் ஆய்வுக்குழு உறுப்பினா் மோகன்காந்தி, தமிழக விவசாயிகள் சங்க இளைஞரணி மாநில நிா்வாகி சுபாஷ், பாரதீய ஜனதா மாவட்ட துணைத்தலைவா் எஸ்.ரமேஷ், கீழ்வெங்கடாபுரம் கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துக்கொண்டனா்.
இக்கூட்டத்தில் அரக்கோணம் வட்டார வேளாண் அலுவலக வேளாண் பொருள் கிடங்கை அரக்கோணம் நகரப்பகுதியில் உள்ள வேளாண் துறைக்கு சொந்தமான இடத்திற்கு மாற்ற வேண்டும், வனவிலங்குகளால் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரண தொகையை துரிதமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.