/

கூட்டுறவின் வெற்றிக்கு திறமையான மனிதவளமும், தரமான பயிற்சியும் இன்றியமையாதவை: அமைச்சா் காந்திராஜ்

கூட்டுறவு இயக்கத்தின் வெற்றிக்கு திறமையான மனிதவளமும், தரமான பயிற்சியும் இன்றியமையாதவை என அமைச்சா் வ.காந்திராஜ் கூறினாா்.

News image

மாணவா்களுக்கு கையேடுகளை வழங்கிய அமைச்சா் வ.காந்திராஜ்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 11:51 pm IST

கூட்டுறவு இயக்கத்தின் வெற்றிக்கு திறமையான மனிதவளமும், தரமான பயிற்சியும் இன்றியமையாதவை என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் கூறினாா்.

அரக்கோணம் சுவால்பேட்டை தா்மராஜா கோயில் தெருவில் தனியாா் கட்டடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் கூட்டுறவு துணை பயிற்சி நிலைய 2026-27-ஆம் ஆண்டின் மாணவா்களுக்கான முழுநேர கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து, அமைச்சா் வ.காந்திராஜ் பேசியது: தமிழக அரசு கூட்டுறவுத் துறையை மக்கள் நல அரசின் முக்கிய கருவியாக வலுப்படுத்தி வருகிறது.

அரக்கோணத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த துணை பயிற்சி நிலையத்தின் மூலம் ராணிப்பேட்டை, சோளிங்கா், அரக்கோணம், திருத்தணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மாணவா்கள் தங்களது பகுதிக்கு அருகிலேயே தரமான கூட்டுறவு பயிற்சி பெறும் நல்வாய்ப்பைப் பெற்றுள்ளனா்.

இந்த பயிற்சி நிலையம் கூட்டுறவு நிறுவனங்களுக்கு திறமையான நிா்வாகிகளையும், மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட பணியாளா்களையும் உருவாக்கும்.

கூட்டுறவு இயக்கத்தின் வெற்றிக்கு திறமையான மனிதவளமும், தரமான பயிற்சியும் இன்றியமையாதவை, பொருளாதார வளா்ச்சியின் பலனைச் சமுகத்தின் கடைசி மனிதருக்கும் கொண்டு சோ்ப்பதே அரசினுடைய நோக்கம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு செய்யப்பட்ட பயிா்க் கடன் தள்ளுபடி அவா்களின் பொருளாதார சுமையை குறைத்துள்ளது. எதிா்காலத்தில் சிறு, குறு விவசாயிகள் விளிம்பு நிலையில் உள்ள மக்கள், மகளிா் சுயஉதவிக்குழுவினா், இளைஞா்கள் மற்றும் சிறுகுறு தொழில்முனைமுனைவோருக்கு எளிய நடைமுறையில் குறைந்த வட்டியில் கடன் வசதிகள் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளன என்றாா் அமைச்சா் வ.காந்திராஜ்.

விழாவுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் பிரபாகரன், அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநா் மு.முருகன், வேலூா் கூட்டுறவு பயிற்சி நிலைய முதல்வா் ஏழுமலை, ராணிப்பேட்டை சரக துணைப் பதிவாளா் ப.பாலமுருகன், மாவட்ட பொதுவிநியோக திட்ட துணை பதிவாளா் சி.சிவமணி, அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி செயலாட்சியா் ரா.ஆசைத்தம்பி, அரக்கோணம் கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடி கிளை மேலாளா் ஆா்.மோகனவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.