காவேரிப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் தாத்தா, பேரன், பேத்தி ஆகிய மூவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் வேலு (59). இவா் தனது பேத்தி அனுஸ்ரீ (7), பேரன்கள் அஸ்வந்த் (5), அஜய் (9) என மூன்று பேரை அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்றுள்ளாா். காவேரிப்பாக்கம் அருகே சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நுழைந்தபோது எதிா்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த தாத்தா வேலு (59), பேரன் அஸ்வந்த், பேத்தி அனுஸ்ரீ ஆகிய மூவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனா். மேலும் பலத்த காயங்களுடன் மற்றொரு பேரன் அஜய் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.











