திருப்பத்தூர்: நாளை பக்ரீத் பண்டிகை முன்னிட்டு வாணியம்பாடியில் மாட்டுச் சந்தை களைக்கட்டியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரிய மாட்டு சந்தையாக வாணியம்பாடி மாட்டு சந்தை விளங்கி வருகிறது. வாணியம்பாடியில் மாட்டு சந்தையானது வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கூடுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்பத்தூர் மாவட்டதில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்தும், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வதும், மாடுகளை வாங்குவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாடுகள் இந்த வாணியம்பாடி மாட்டு சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
வாணியம்பாடியை பொறுத்தவரை இஸ்லாமியர்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதி என்பதால் நாளை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இஸ்லாமியர்கள் குர்பானி கொடுப்பது வழக்கம். இதனால் இந்த சனிக்கிழமை கூடுதலாகவே சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
இங்கு விவசாயிகள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும் குர்பானி கொடுப்பதற்காக தற்போது மாடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கமாக இந்த வாணியம்பாடி மாட்டு சந்தையில் ரூ.60 லட்சத்திற்கு மேல் மாடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த வாரம் சனிக்கிழமை மாடுகள் விற்பனையானது ரூ. 1 கோடிக்கு மேல் இருக்கும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.